தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு கர்த்தர் அருளும் இரக்கம்

  


இன்றைய வேதாகம வசனம்
"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, 
கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்."
(சங்கீதம் 103: 13)

"இரக்கம்" என்னும் வார்த்தையானது தன் நிலைமைகளையும் தாண்டி வேதனையில் இருக்கும் இன்னுமொருவரின் ஆறுதலுக்காக பிரயாசப்படும் ஒரு நபரை நமக்கு ஞாபகப்படுத்தலாம். இரக்கமாய் இருப்பது என்பது கஷ்டத்தில் இருக்கும் ஒருவரைக் குறித்ததான உணர்திறனும் அவரின் சூழ்நிலையைக் குறித்ததான அனுதாபமும் அடங்கியதாய் இருப்பதையும் நாம் காண்கின்றோம். நாம் எப்போதெல்லாம் இரக்கமாய் இருக்க முற்படுகின்றோமோ அப்போதெல்லாம் நாமாகவே மற்றவர்களின் இக்கட்டான மற்றும் வேதனையான நிலைமைக்குள் நம்மையும் இணைத்துக்கொள்ள முற்படுகின்றோம் என்ற உண்மையை உணருவோமாக. இரக்கமாயிருப்பது என்பது வேதனையின் நிலைமையில் இருக்கும் ஒருவரின் மன பாரங்களோடு சேர்ந்து இரக்கம் காட்டுபவரின் மன வேதனையும் அடங்கியதாய் இருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைவூட்டுவோம். இதுவே, கர்த்தருக்குப் பயந்தவர்கள் பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய ஆசீர்வாதம்; கர்த்தரின் இரக்கம்!

கர்த்தர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அத்துடன், ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுடன் இந்த வாழ்விலே பயணிப்பது போல அவர் பயணிக்கின்றார். இந்த சங்கீதத்தில் தொடரும் வசனங்களில் நாம் வாசிப்பது "நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது" (சங்கீதம் 103: 14 - 16) என்பதே. நித்தியம் என்னும் ஒரு முடிவில்லாத நீண்ட கோடாகிய கர்த்தரின் எண்ணத்தில் ஒரு சிறு புள்ளியைப் போல இருக்கும் மனித வாழ்வை கர்த்தர் கவனித்து, மனிதராகிய நம்மேல் இரக்கம் வைத்து ஒரு தகப்பனைப் போல நம்மேல் கவனமாயிருப்பதும், நம் வேதனைகளிலும் இக்கட்டுகளிலும் அவர் பங்குபெறுவதும் எவ்வளவு பெரிதான ஒரு சலாய்க்கியம். 

இன்றைய தியானத்துக்காய் நாம் தெரிவு செய்திருக்கும் வேத வசனங்கள் இருந்து இரக்கம் பற்றியதான நமது விளங்கிக்கொள்ளுதல், முதலாவது ஒரு தகப்பன் தன் பிள்ளைகள் மேலே வைத்திருக்கும் அன்பைக் காட்டுவதாய் இருந்தாலும், அதன் இரண்டாம் பகுதி இந்த இரக்கம் என்னும் நிச்சயத்தை நமது வாழ்க்கையில் கொண்டுவரும் கர்த்தருக்குப் பயப்படும் வாழ்வை உணர்த்தி நிற்கின்றன. இந்த தகப்பன்-பிள்ளை உறவிலே, கர்த்தருக்கு பயப்படுதல் ஒரு முக்கியத்துவத்தை பெறுவதை நாம் விளங்கிக்கொள்ளும் அதே வேளை, ஞானியாகிய சாலமோன் ராஜாவின் வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கும் வருகின்றன. "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு" (நீதிமொழிகள் 9: 10).

கர்த்தருக்கு நாம் எவ்வாறு பயந்திருக்கவேண்டும்? அவருடைய பிரசன்னம் நெருகும்போது பயந்தோடுவதா? அவருக்கு மறைந்திருப்பதா? தூரமாய் இருப்பதா? நம்மேல் இரக்கமாய் இருக்கிற ஒரு அன்பான ஆண்டவரைக்குறித்து நமக்கு இருக்கும் விளங்கிக்கொள்ளுதலுக்கு இது முரணானதாய் இது தெரிக்கின்றதா? எவ்வாறு ஒரு உறவில் பயப்படுதலும் இரக்கமும் ஒன்றித்து செயற்படமுடியும்? நமக்கு தம்முடைய இரக்கத்தை நிச்சயித்திருக்கிற கர்த்தாரால் எவ்வாறு அவருக்குப் பயப்படுதலை இந்த உறவுக்கு அடிப்படையாக வைத்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளானது, கர்த்தரை விட்டு நாம் தூரமாய் ஓடி கர்த்தருக்குப் பயந்து வாழ்வதல்லாமல், மாறாக கர்த்தரை சேவிப்பதிலும் அவரை நெருங்குவதிலுமே தேவ  பயம் வெளிப்படுகிறது என்ற புரிதலை எனக்குள்ளேகொடுத்தது. உபாகமம் 10: 12, 13 இவ்வாறு சொல்கின்றது. "இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்." ஆம்! என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை நான் இங்கு பெற்றுக்கொண்டேன். கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஒரு வாழ்க்கைமுறையாகும். இந்த வாழ்க்கை முறையில் மேலே உள்ள வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் உள்ளடங்கும். நாம் கர்த்தருக்குப் பயப்படவும், அவர் வழிகளிலெல்லாம் நடக்கவும், அவரில் அன்புகூரவும், முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரை சேவிக்கவும், நம்முடைய நன்மைக்கென்று கர்த்தர் கொடுத்திருக்கும் அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருக்கிற ஜனங்களாய் இருக்கின்றோம். ஆகையால், பயம் மட்டுமே அல்லாது, தேவ பயத்தில் ஆரம்பித்து மற்றனைத்தையும் உள்ளடக்கிய ஒரு 'தேவ பயம் நிறைந்த வாழ்க்கைமுறையே' இந்த அன்பின் உறவுக்கு அடிப்படையாக அமையவேண்டும்.

இன்றைய நாளிலும், நீங்கள் இந்த தேவ பயம் நிறைந்த வாழ்க்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கவேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்

🎶
"எங்கே போவேன்"
by டேவிட் செல்வம்


Global Reach of 'Weekly Devotions with Ebenezer'

Like and Follow Our Facebook Page For Regular Updates

Like and Follow Our Facebook Page For Regular Updates
Click on the picture above to reach our FB page

Popular Posts